Press "Enter" to skip to content

எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதி

நாட்டினுள் எந்தவொரு எரிபொருள் தட்டுப்பாடும் ஏற்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உறுதியளித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருள் முன்பதிவுகள் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதன் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்தார்.

“மக்களுக்கு சொல்ல விரும்புவது, எந்த பிரச்சனையும் இல்லாமல் அடுத்த இரண்டு மாதங்களுக்கு தேவையான எரிபொருளை நாங்கள் முன்பதிவுகள் செய்துள்ளோம். அந்த முன்பதிவுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.

இந்த நாட்டில் எந்த காரணத்தினாலும் அடுத்த இரண்டு மாதங்களுக்கு எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது. பிரச்சனை என்னவென்றால், எரிபொருள் எந்த இடங்களிலிருந்து வருகிறது என்பதுதான். அதற்கு பிறகு, போரின் தாக்கம் இருக்கிறதா என்பதை நாம் பார்க்க வேண்டும்.” என்றார்.

அத்துடன் தற்போதைய நிலைமையில், சட்டவிரோதமாக எரிபொருள் கையிருப்பு வைப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜே. ராஜகருணா மேலும் தெரிவித்தார்.

“எங்களிடம் உள்ள அறிக்கைகளின்படி, ஒக்டேன் 92 பெற்றோல் பெருமளவு இறக்குமதி செய்யப்படுவது போர் நடக்கும் பிராந்தியத்திலிருந்து அல்ல. அந்த எரிபொருள் மலேசியா, சிங்கப்பூர், இந்தியாவில் இருந்து வருகிறது.

ஒரே ஒரு இறக்குமதி ஓமானிலிருந்து செய்யப்பட்டது. அதுவும் ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டாலும் எங்களுக்கு பிரச்சனை இல்லை. நாங்கள் அந்த விநியோகஸ்தர்களிடம் பேசி, அதை முழுமையாக உறுதி செய்துள்ளோம். டீசல் விடயத்திலும் அப்படித்தான். எந்த சிக்கலும் இல்லை” என்றார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *